கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன: அமைச்சர் பொன்முடி

ஆதி வனம் மேம்பாட்டு திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பொன்முடி கூறினார்.
சென்னை,
தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது, பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, பசுமை பரப்பினை அதிகரித்து கால நிலை மாற்றத்தின் வீரியத்தைக் குறைக்க அரசு ஆவண செய்யுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, தமிழகத்தின் பசுமை பரப்பை 23.733 சதவீதத்தை உயர்த்தும் நோகத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கம் முதல்-அமைச்சரால் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளில் 265 கோடி மரக் கன்றுகள் நடப்படும். கடந்த 3 ஆண்டுகளில் 10.86 கோடி மரங்கள் நடப்பட்டுள்ளன. 36 மாவட்டங்களில் 33.23 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகள் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
25 கோடியில் 100 மரகத பூஞ்சோலைகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு 83 மரகத பூஞ்சோலைகள் பணிகள் நிறைவு பெற்றுள்ளது. தமிழ்நாட்டி கடல் பகுதிகளில் உயர் அரண் எற்படுத்தும் திட்டம் 25 கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் வனப்பரப்பை அதிகரிக்க ஆதி வனம் மேம்பாட்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது விரைவில் செயல்படுத்தப்படும் என்று பதில் அளித்தார்.
அலையாத்தி காடுகள்:-
தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் சந்திரகுமார், மரக்கன்றுகள் 6 மாத பருவத்தில் நடும்போது ஆடு, மாடுகள், கன்றுகள் சாப்பிட்டு சேதப்படுத்தும் நிலை உள்ளது. சீனாவில் 5 ஆண்டுகள் வரை மரம் வளர்த்து அதன் பின் வேறு இடங்களில் நடப்படும் முறையை தமிழ்நாட்டிலும் கொண்டு வரப்படுமா என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த வனத்துறை அமைச்சர் பொன்முடி, பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம் 650 ஹெக்டேர் தரம் குன்றிய அலையாத்தி காடுகள் மீட்டு எடுக்கப்பட்டுள்ளது. 310 ஹெக்டேரில் புதிய காடுகளில் 12 மாவட்டங்களில் தேர்வு செய்யப்பட்டு அலையாத்தி நாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் தமிழ்நாட்டில் வனத்துறையால் 8.3 லட்சம் அலையாத்தி வகை தாவர இனங்கள் நடப்பட்டுள்ளன. கன்றுகள் மரங்கள் அனைத்து இடங்களில் நட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோரங்களில் கடல் அரிப்பை தடுக்க பருத்தி, பனை, முந்திரி போன்ற மரங்கள் 288 ஹெக்டேர் பரப்பளவில் நடப்பட்டுள்ளது என்று பதில் அளித்தார்.






