

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகராட்சி பகுதிகளில் நாள் தோறும் 6,500 டன் திடக்கழிவுகளும், ஆயிரம் டன் கட்டிடம் மற்றும் இடிபாட்டுக் கழிவுகளும் அகற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே, வீட்டில் உள்ள பழைய சோபாக்கள், மெத்தகைகள், மரச்சாமான்கள் ஆகியவற்றை ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் மாநகராட்சி பணியாளர்களே நேரடியாக வந்து அகற்றி வருகின்றனர். அந்த வகையில், கடந்த 15-ந்தேதி வரையில் 826 பேரிடமிருந்து 325.57 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று 75 பேரிடமிருந்து வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் 59.70 டன் பழைய பொருட்கள் பெறப்பட்டு கொடுங்கையூரில் உள்ள எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் நடைபெறும் இச்சேவையை பெற பொதுமக்கள் நம்ம சென்னை செயலியில் முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும் அல்லது மாநகராட்சியின் 1913 என்ற எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். 94450 61913 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தகவல் அனுப்பலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.