மீனவர்கள் விடுவிக்க நடவடிக்கை தேவை; மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நாகை மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நிலையில் 3 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் 31 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று சிறைபிடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தநிலையில், மத்திய அரசு, இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவில்,
மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பது போல், நமது அண்டை நாடான இலங்கையில் புதிய ஓர் ஆட்சி அமைந்த பிறகும், தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் தாக்கப்படுவதும், கைது செய்யப்படுவதும் தொடர்கதையாக உள்ளது. தங்களின் வாழ்வாதாரத்திற்காக உயிரையும் பணயம் வைத்து மீன்பிடிக்கும் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் 31 பேரையும், அவர்களது 3 விசைப்படகுகளையும் நேற்று (3.11.2025) இலங்கை கடற்படையினர் தாக்கி கைது செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறிய செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க மத்திய அரசு, இலங்கை அரசோடு தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள அனைத்து தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கும் தேவையான உதவிகளையும் வழங்க வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.






