எடப்பாடி பழனிசாமி தலைமையில் 31-ந் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன.
சென்னை,
தமிழகத்தில் அடுத்த ஆண்டு (2026) ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் எல்லாம் தேர்தல் பரீட்சைக்கு தயாராகி வருகின்றன.
பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தற்போது வரை பாஜக, தமாகா ஆகிய இரு கட்சிகள் மட்டுமே உள்ளன. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியை உறுதி செய்தபோதிலும், தொகுதி பங்கீடு குறித்து வெளிப்படையாக இரு தரப்பிலும் எதுவும் பேசவில்லை. ஆனால் இரு தரப்பிலும் சில மறைமுக பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தன.
இதற்கிடையில் அண்மையில் சென்னை வந்த தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய மந்திரியுமான பியூஷ் கோயல், எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். கூட்டணியில் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் வருகிற தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது, கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் அ.தி.மு.க.-பா.ஜனதா மற்றும் மற்ற கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாகவும் தகவல் வெளியானது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் நெருங்கு நிலையில், வருகிற 31-ம் தேதி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,
“அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை, இராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 31.12.2025 (புதன்கிழமை) காலை 10 மணிக்கு, மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில், தேர்தல் பணிகள், கூட்டணி விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று பாஜக திட்டவட்டமாக கூறிய நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அரசியல் களத்தில் முக்கியவத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






