செல்வாக்கான தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவு

தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு உள்ளன. இந்த தேர்தலில் கடந்த முறையை விட அதிக இடங்களை கைப்பற்றும் முயற்சியில் பா.ஜனதா தீவிர களப்பணி ஆற்றி வருகிறது.
தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் தனக்கான முத்திரையை மேலிடத்தில் பதிக்க கங்கணம் கட்டி பணியாற்றி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கேட்க வேண்டிய தொகுதிகள் குறித்து ரகசிய ஆலோசனை நடத்தி அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை பா.ஜனதா தலைமையிடம் கொடுப்பதற்காக நேற்று முன்தினம் இரவு அவர் டெல்லி சென்றதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணி அளவில் டெல்லி கிருஷ்ணமேனன் ரோட்டில் உள்ள மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்தார். 10.20 மணி அளவில் அவர் வெளியே வந்தார். இந்த சந்திப்பு குறித்து நயினார் நாகேந்திரன் கூறுகையில், ‘மத்திய உள்துறை மந்திரியுடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது. கூட்டணி கட்சி தொடர்பாகவோ, தொகுதி பங்கீடு தொடர்பாகவோ பேசவில்லை. பா.ஜனதா தேசிய செயல் தலைவரை இன்று காலை தலைமையகத்தில் சந்தித்து விட்டு சென்னை திரும்புவேன்’ என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், அதிமுகவிடம் கடந்த தேர்தலை விட கூடுதல் தொகுதிகளை பெற்று போட்டியிட உள்ளதால் அதிக செல்வாக்கு உள்ள தொகுதிகளில் தீவிரமாக கட்சியினர் பணியாற்ற நயினார் நாகேந்திரனுக்கு அமித்ஷா உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 2-வது வாரத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு வரும்போது தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பாஜக வெல்ல வாய்ப்புள்ள 50 தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பரமக்குடி, சாத்தூர், பட்டுக்கோட்டை, பாளையங்கோட்டை, நாங்குநேரி தொதிகளும், மேற்கு மண்டலத்தில் கோவை வடக்கு, கோவை தெற்கு, கவுண்டம்பாளையம், பல்லடம், சூலூர், சிங்காநல்லூர் ஆகிய தொகுதிகளும் பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் மயிலாப்பூர், தியாகராயநகர், விருகம்பாக்கம், வேளச்சேரி தொகுதிகளும், தென்மாவட்டங்களில் குமரி, குளச்சல், கிள்ளியூர், நாகர்கோவில், நெல்லை, மதுரை வடக்கு தொகுதிகளும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த பட்டியலின் அடிப்படையில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் பாஜக திட்டமிட்டுள்ளது. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வாய்ப்பு உள்ள 15 தொகுதிகளின் பட்டியலையும் அமித்ஷாவிடம் நயினார் நாகேந்திரன் கொடுத்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






