மெட்ரோவை விரும்பும் சென்னை மக்கள்... ஜூலையில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம்

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், சென்னை மெட்ரோவில் பயணம் செய்தவர்களின் எண்ணிக்கை ஜூலையில் உச்சம் தொட்டுள்ளது.
சென்னை,
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரெயிலில் மட்டும் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது;
"சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரெயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. சென்னை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணித்துள்ளனர். ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,58,910 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் அதிகம் பயணித்துள்ளனர். இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரெயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கையாகும்.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 86,99,344 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,65,803 பயணிகளும், மார்ச் மாதத்தில் 92,10,069 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 87,89,587 பயணிகளும், மே மாதத்தில் 89,09,724 பயணிகளும், ஜூன் மாதத்தில் 92,19,925 பயணிகளும் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 04.07.2025 அன்று 3,74,948 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2025, ஜூலை மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 6,55,991 பயணிகள், க்யுஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 45,66,058 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 51,56,786 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், டிஜிட்டல் எஸ்.வி.பி, க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, வாட்ஸ் அப் - (+91 83000 86000), பே டிஎம், போன் பே மற்றும் சிங்கார சென்னை அட்டை போன்ற பயணச்சீட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு 20% கட்டணத் தள்ளுபடியை வழங்குகிறது. மெட்ரோ ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






