மோட்டார் சைக்கிள் வாங்கி தராத விரக்தியில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்த மாணவர் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடித்துள்ளார்.
சென்னை அடையாறு ராமசாமி கார்டனை சேர்ந்த நாகராஜன், தச்சு தொழிலாளி. இவருக்கு ஹரிகரன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஹரிகரன் (வயது 18) சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து வந்தார். ஹரிகரன் தனது தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தரவேண்டும் என்று அடம்பிடித்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் மகனின் வயதை காரணம் காட்டி நாகராஜன் மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுக்காமல் காலம்தாழ்த்தி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிகரன் தனது தந்தைக்கு தெரியாமல் அவரது மோட்டார் சைக்கிளை ஓட்டி சென்றுள்ளார். அப்போது கவன குறைவால் மோட்டார் சைக்கிளில் இருந்து ஹரிகரன் கீழே விழுந்ததாக தெரிகிறது. இதில் உடலில் ஏற்பட்ட சிராய்ப்புகளை பார்த்த அவரது தந்தை, ஹரிகரனை கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஹரிகரன் நேற்று முன்தினம் இரவு வீட்டின் அறையில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து சாஸ்திரிநகர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.






