திண்டிவனத்தில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு


திண்டிவனத்தில் இன்று திமுக நிர்வாகிகள் கூட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
x
தினத்தந்தி 27 Jan 2025 10:49 AM IST (Updated: 27 Jan 2025 10:50 AM IST)
t-max-icont-min-icon

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், 2 நாட்கள் சுற்றுப்பயணமாக விழுப்புரம் மாவட்டத்திற்கு செல்கிறார். இதற்காக அவர், இன்று (திங்கட்கிழமை) மாலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகிறார். அவருக்கு மாவட்ட எல்லையான ஓங்கூர் சுங்கச்சாவடி அருகில் வனத்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் சேகர், தெற்கு மாவட்ட செயலாளர் டாக்டர் பொன்.கவுதமசிகாமணி ஆகியோர் முன்னிலையில் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர்.

இந்த வரவேற்பை பெற்றுக்கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்து புறப்பட்டு திண்டிவனம் நகரில் சென்னை சாலையில் மேம்பாலம் வழியாக ஜே.வி.எஸ். திருமண மண்டபம் வரை நடந்தே சென்று (ரோடு ஷோ) பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். அதன் பிறகு அந்த மண்டபத்தில் நடைபெறும் திமுக வடக்கு, தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுடன் கலந்துரையாடி சிறப்புரையாற்றுகிறார். பின்னர் திண்டிவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு விழுப்புரம் வருகை தரும் அவர், கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகையில் இரவு தங்குகிறார்.

இதனை தொடர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை) காலை விழுப்புரம் வழுதரெட்டியில் ரூ.4 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கம் மற்றும் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர்நீத்த 21 சமூகநீதி போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் ரூ.5 கோடியே 70 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

பின்னர் அதன் அருகில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, பல்வேறு துறைகள் சார்பாக ஏழை, எளிய மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார். இவ்விழாவை முடித்துக்கொண்டு அன்று மதியமே அவர், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.

விழுப்புரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவரை வரவேற்று திண்டிவனம் நகரம், விழுப்புரம் நகரின் பல்வேறு இடங்களிலும் மற்றும் மாவட்டத்தின் முக்கிய சாலைகளிலும் விளம்பர பதாகைகள், கட்-அவுட்டுகள், அலங்கார வளைவுகள், கொடி தோரணங்கள் உள்ளிட்டவற்றை தி.மு.க.வினர் வைத்துள்ளனர்.

1 More update

Next Story