எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: நாளை மறுநாள் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை


எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு: நாளை மறுநாள் சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை
x

தான் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார்.

சென்னை,

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்கள் உட்பட பல்வேறு முக்கிய தகவல்களை தவறாக தெரிவித்ததாக கூறி, அவர் மீது நடவடிக்கை கோரி உத்தமபாளையத்தைச் சேர்ந்த மிலானி என்பவர் சேலம் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவை விசாரித்த சேலம் ஐகோர்ட்டு, இந்த புகார் குறித்து முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யுமாறு சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, காவல்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த சூழலில் இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், புகார்தாரர் மிலானி எடப்பாடி தொகுதியை சேர்ந்தவரோ, தேர்தலில் போட்டியிட்டவரோ அல்ல. வேட்புமனுவில் எந்த தகவலையும் மறைக்கவில்லை. புகாரே விசாரணைக்கு உகந்ததல்ல என்று வாதிட்டார்.

காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சேலம் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு செய்தது என்றார். இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மனு மீதான தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தார். இந்த வழக்கில் கடந்த 22-ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் காவல்துறையினரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமிக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் வேட்பு மனுவில் தகவலை மறைத்ததாக வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுமீது நாளை மறுநாள் (ஜனவரி 27-ம் தேதி) சுப்ரீம்கோர்ட்டில் விசாரணை நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story