கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை; விஜய்க்கு 23 % ஆதரவு; கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்


கரூர் சம்பவத்திற்கு பிறகும் குறையவில்லை; விஜய்க்கு 23 % ஆதரவு; கருத்துக் கணிப்பில் பரபரப்பு தகவல்
x

த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்து உள்ளது

சென்னை,

விஜய் அரசியல் பயணம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநில மாநாட்டின் மூலம் மேலும் த.வெ.க.வின் அரசியல் செல்வாக்கு அதிகரித்தது. அரசியல் வட்டாரங்கள் மட்டுமின்றி பொதுமக்கள்மத்தியிலும் த.வெ.க.வின் அரசியல் பணிகள் பேசும் பொருளானது.

இந்நிலையில் பிரபல அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகம் முழுவதும் தனது குழுவினர் மூலம் கருத்துக்கணிப்பு எடுத்தார். கருத்துக்கணிப்பு முடிவுகளின் படி த.வெ.க.வுக்கு 15 முதல் 20 சதவீதம் வாக்குகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டன. தொடர்ந்து கடந்த மே மாதம் மும்பையில் உள்ள பிரபல நிறுவனம் எடுத்த சர்வே முடிவில், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 95 முதல் 105 இடங்கள் பிடிக்கும் என தெரிவித்திருந்தது.

இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் பிரபல அரசியல் கட்சிகளின் பார்வையை த.வெ.க. பக்கம் தீவிரமாக திரும்பச் செய்தது. த.வெ.க. செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன. இதைத் தொடர்ந்து த.வெ.க.வின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்புகளை விஜய் வெளியிட்டு வந்தார். அந்த வகையில் த.வெ.க.வின் 2-ம் மாநில மாநாடு மதுரையில் கடந்த ஆகஸ்ட் 21-ந்தேதி நடந்தது. மாநாட்டில் திரண்ட லட்சக் கணக்கான கூட்டமும் விஜயின் பேச்சுக்களும் தமிழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.

அடுத்த அதிரடியாக விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயண திட்டத்தை அறிவித்தார். முதற்கட்டமாக திருச்சி, அரியலூரிலும் 2-வது கட்டமாக நாகப்பட்டினம், திருவாரூரிலும் விஜய் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தால் சுற்றுப்பயணத்தில் தாமதம் ஏற்பட்டது.3-வது கட்டமாக த.வெ.க. தலைவர் விஜய் கரூரில் பிரசாரம் செய்தார். அப்போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் கரூர் சம்பவத்திற்கு பிறகு த.வெ.க. செல்வாக்கு எப்படி இருக்கிறது என்பது குறித்து மீண்டும் தமிழகம் முழுவதும் தற்போது பிரபல அரசியல் கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கருத்துக்கணிப்பு முடிவில் கரூர் சம்பவத்தால் விஜய்க்கு செல்வாக்கு குறையவில்லை எனவும் த.வெ.க.வுக்கு பொதுமக்கள் மத்தியில் 23 சதவீதம் ஆதரவு இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாக செய்திகள் பரவி வருகிறது.

1 More update

Next Story