ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் அறிவிப்பு

கோப்புப்படம்
ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு நிதியுதவி: முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏரியில் தவறி விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் வட்டம், தி.அத்திப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவி நித்யா தம்பதியரின் மகன் தாரகேஷ் (10 வயது) என்பவர் மேற்படி கிராமத்திலுள்ள பெரிய ஏரியில் உறவினர்களுடன் குளிக்கச் சென்றபோது எதிர்பாராதவிதமாக தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும் இச்சம்பவத்தில், உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.