திருப்பூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பள்ளியை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இங்கு ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயது சிறுமி நேற்று மாலை கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கழிவறையை சுத்தம் செய்து கொண்டிருந்த அசாம் மாநில வாலிபர் ஒருவர் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி வகுப்பாசிரியரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
அதனை தொடர்ந்து சிறுமி பள்ளியில் நடந்த சம்பவத்தை தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்த நபரை கைது செய்ய கோரி முழக்கங்களை எழுப்பினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து சிறுமியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய அசாமை சேர்ந்த ஜெய் (27) என்பவரை தெற்கு அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதனை தொடர்ந்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.
இந்த நிலையில் இன்று காலை 100க்கும் மேற்பட்டோர் பள்ளி முன்பு ஒன்று கூடி பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் நடந்த சம்பவத்திற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கூறி பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து செல்லுமாறு போலீசார் எச்சரித்து வந்தனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து செல்லாததால், போராட்டக்காரர்களை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று கைதுசெய்தனர். சிறுமியின் பெற்றோரையும் போலீசார் கைதுசெய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.






