கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் வெட்டிக்கொலை


கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் வெட்டிக்கொலை
x

கோப்புப்படம் 

இளம்பெண்ணுடன் கள்ளக்காதல் ஏற்பட்ட நிலையில் அதற்கு இடையூறாக இருந்த கணவனை தொழிலாளி வெட்டிக்கொலை செய்துள்ளார்.

சென்னை

சென்னையை அடுத்த நன்மங்கலம் ராமகிருஷ்ணன் பெருமாள் நகர் 6-வது தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (40 வயது). இவர் அதே பகுதியில் மரக்கடை நடத்தி வந்தார். இவர் தனது மாமா மகளான பராசக்தியை (32 வயது) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

மகேஸ்வரனின் நண்பர் புதுச்சேரியை சேர்ந்த சுதாகர் ராஜ் (38 வயது). தொழிலாளியான இவர் சேலையூர் காமராஜபுரத்தில் வசித்து வருகிறார். இவருக்கும், மகேஸ்வரனின் மனைவி பராசக்திக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் தனியாக சென்று குடும்பம் நடத்தினர். ஒரு மாதத்திற்கு பின் மகேஸ்வரன் தனது மனைவியிடம் குழந்தைகள் எதிர்காலத்தை எடுத்து கூறி பராசக்தியை தன்னுடன் அழைத்து சென்றார்.

ஆனாலும் பராசக்தியுடனான கள்ளக்காதலை சுதாகர் ராஜ் தொடர்ந்துள்ளார். மேலும் பராசக்தியை பார்க்க சுதாகர் ராஜ் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது மகேஸ்வரன் திட்டி அனுப்பி உள்ளார். இந்த நிலையில் நேற்று மகேஸ்வரன் நன்மங்கலம் அம்பேத்கார் தெரு வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த சுதாகர் ராஜ் மகேஸ்வரனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இதை கண்ட அக்கம்பக்கத்தினர் மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேடவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரக்கத்துல்லா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மகேஸ்வரன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே தப்பி ஓடிய சுதாகர் ராஜ் சேலையூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதுகுறித்து மேடவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதான சுதாகர் ராஜிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story