2026 மட்டுமல்ல; 2031, 2036-லும் திமுக ஆட்சிதான்: மு.க.ஸ்டாலின்

ஊட்டியில் மலர் கண்காட்சி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
கோடை காலத்தில் நீலகிரி மாவட்டத்தின் அழகை கண்டுகளிக்க வருகை தரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தமிழக அரசின் தோட்டக்கலை துறை சார்பில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்த ஆண்டு 127-வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. இந்த கண்காட்சியை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது மலர்களால் உருவான சிம்மாசனத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்கா ஸ்டாலிலுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.
இந்த நிலையில், இன்று ஊட்டியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
ஊட்டியில் 5 நாள் பயணம் மிக சிறப்பாக இருந்தது; மகிழ்ச்சியாக இருந்தது. அதேநேரத்தில் மக்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனால் திராவிட மாடல் ஆட்சிக்கு நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமின்றி.. இங்கு வரும் சுற்றுலா பயணிகளான மற்ற மாவட்ட மக்களும் ஆதரவு அளித்து வருகிறார்கள் என்பது தெரிகிறது. மலர் கண்காட்சி மிகவும் சிறப்பாக இருந்தது.
கவர்னர் வழக்கு விவகாரத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுப்ரீம் கோர்ட்டிடம் விளக்கம் கேட்டது தொடர்பாக நேற்றே அறிக்கை வெளியிட்டேன், மற்ற மாநில முதல்-மந்திரிகள், மாநில தலைவர்களுடன் ஆலோசித்து, கருத்துகள் கேட்டு அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுப்போம். மத்திய அரசு தொடர்ந்து சர்வாதிகாரப் போக்கை கடைபிடிக்கிறது. 2026 மட்டுமல்ல 2031, 2036-ம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிதான் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறினார்.






