ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகை


ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி அடுத்த மாதம் தமிழகம் வருகை
x

கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ராகுல்காந்தி, பிரியங்கா அடுத்த மாதம் தமிழகம் வருகை தருகின்றனர்.

சென்னை,

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தன்னை தீவிரமாக தயார்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் கட்சியை வலுப்படுத்தும் வகையில் கிராம கமிட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை தமிழக தேர்தல் பிரசாரத்திற்கு அழைப்பதற்கான முன்னெடுப்புகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.

அதன்படி, வருகிற ஜனவரி மாதம் ராகுல்காந்தி பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாடு, பிரியங்கா காந்தி பங்கேற்கும் மகளிர் பேரணியும் நடைபெற உள்ளது. இதற்காக அவர்கள் அடுத்த மாதம் தமிழகம் வர உள்ளனர். இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முழுவதும் பங்கேற்கும் கிராம கமிட்டி மாநில மாநாட்டை ஒருங்கிணைக்க கீழ்கண்ட குழுக்களுக்கு தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, நிதிக்குழுவுக்கு கே.வி.தங்கபாலு, வாகன வசதி ஏற்பாட்டுக்குழுவுக்கு திருநாவுக்கரசர், வரவேற்புக்குழுவுக்கு கிருஷ்ணசாமி, விளம்பரக்குழுவுக்கு கே.எஸ்.அழகிரி, பிரசாரம் மற்றும் அணி திரட்டல் குழுவுக்கு பீட்டர் அல்போன்ஸ், மாநாட்டு திடல் அமைப்பு, தங்குமிடம் மற்றும் உபசரிப்புக்குழுவுக்கு ரூபி மனோகரன் தலைவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கலந்துகொள்ளும் மகளிர் பேரணியை சிறப்பாக நடத்த கீழ்கண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்படுகிறது. ஜோதிமணி எம்.பி. தலைவராகவும், சுதா ராமகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் எம்.பி. கே.ராணி, மகிளா காங்கிரஸ் மாநில தலைவி ஹசீனா சையத், தாரகை கத்பர்ட் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. ராணி வெங்கடேசன் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

1 More update

Next Story