வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம்: கிராம நிர்வாக அலுவலர் கைது

ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கிராம நிர்வாக அலுவலர் வாங்கியபோது, போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம், மேட்டு மகாதானபுரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (36 வயது), விவசாயி. இவரது தாயார் வீரம்மாள் மரணம் அடைந்தார். இதையடுத்து, வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ்குமார் மகாதானபுரம் வடக்கு கிராம நிர்வாக அலுவலர் பிரபு (46 வயது) என்பவரை அணுகினார்.
அதற்கு அவர் வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.3 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ்குமார், இதுகுறித்து கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சதீஷ்குமாரிடம் கொடுத்து, அதனை கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் கொடுக்குமாறு கூறினர்.
அதன்படி அந்த பணத்தை கிராம நிர்வாக அலுவலர் பிரபுவிடம் சதீஷ்குமார் கொடுத்தார். அதனை பிரபு வாங்கியபோது, போலீசார் அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






