சேவை குறைபாடு: நுகர்வோருக்கு நிதி நிறுவனம் ரூ.50,422 வழங்க உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த ஒருவர், தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் குரங்கனியைச் சேர்ந்த முத்துக்குமார், தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். தவணை தொகையினை தவறாமல் செலுத்தி கடன் பாக்கி தொகை முழுமையும் செலுத்தி முடித்துள்ளார். ஆனால் அதன் பின்னரும் மூன்று மாதங்களுக்கு அதிகப்படியாக தவணை தொகையினை பிடித்துள்ளனர். ஆகவே அதிகப்படியாக பிடித்தம் செய்த தொகையை திரும்பத் தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால் நிதி நிறுவனம் சரியான காரணங்களைக் கூறாமல் மறுத்துள்ளது. இதனால் புகார்தாரர் அதிர்ச்சியும், தாங்க முடியாத வேதனையும் அடைந்து உடனடியாக வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் இதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான நுகர்வோர், தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சக்கரவர்த்தி, உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் அதிகப்படியாக வசூலித்த ரூ.25,422 சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ.15,000, வழக்கு செலவுத் தொகை ரூ.10,000 ஆக மொத்தம் ரூ.50,422-ஐ 6 வார காலத்திற்குள் வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த தொகையை செலுத்தும் தேதி வரை ஆண்டொன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.






