தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

கோப்புப்படம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பஸ்களில் பயணம் செய்ய 2 லட்சத்து 96 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை,
தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் என பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு மாவட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளின்போது சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.
தற்போது தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பலரும் சொந்த ஊருக்கு செல்ல அரசு பஸ்கள், ரெயில்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் பயணிக்க தொடங்கிவிட்டனர். இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 20 ஆயிரத்து 378 சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே அரசு பஸ்களில் தீபாவளி பண்டிகைக்கான முன்பதிவு 3 மாதங்களுக்கு முன்பே தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களுடன், 760 சிறப்பு பஸ்களும், பல்வேறு இடங்களிலிருந்து 565 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.
இதனிடையே , தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்ல அரசு பஸ்களில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதாவது 16-ந்தேதி (இன்று) வியாழக்கிழமை 16 ஆயிரம் பேர், 17-ந்தேதி வெள்ளிக்கிழமை 51 ஆயிரத்து 500 பேர், 18-ந்தேதி சனிக்கிழமை 47 ஆயிரத்து 500 பேர், 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 11 ஆயிரத்து 500 பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 500 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
இதே போன்று தனியார் ஆம்னி பஸ்களில் 16-ந்தேதி (இன்று) வியாழக்கிழமை 28 ஆயிரம் பேரும், 17-ந்தேதி வெள்ளிக்கிழமை 54 ஆயிரம் பேர், 18-ந்தேதி சனிக்கிழமை 48 ஆயிரம் பேர், 19-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை 28 ஆயிரம் பேர் என மொத்தம் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.






