தாயாருக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
தாயாருக்கு போனில் தகவல் தெரிவித்துவிட்டு இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு
Published on

நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்தவர் செல்வசரண் (வயது 25), டெம்போ டிரைவர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் ரேஷ்மா(20). இவர்கள் இருவரும் உறவினர்கள். கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினமும் ரேஷ்மாவிற்கும் செல்வசரணுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செல்வசரண் வீட்டை விட்டு வெளியே சென்றார். ரேஷ்மா வீட்டில் இருந்தார். கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனமடைந்து காணப்பட்ட ரேஷ்மா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

இதையடுத்து ரேஷ்மா, ராஜபாளையத்தில் உள்ள தனது தாயாருக்கு போன் மூலமாக தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த ரேஷ்மாவின் தாயார், நாகர்கோவிலில் உள்ள அவரது உறவினர்களுக்கு போன் மூலமாக இதுபற்றி தெரிவித்தார்.

அதைக்கேட்ட உறவினர்கள், உடனே அங்கு சென்று பார்த்தபோது, ரேஷ்மாவின் வீட்டு கதவு பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை கதவை தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு படுக்கை அறையில் ரேஷ்மா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேஷ்மாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமான 1.5 ஆண்டில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் நாகர்கோவில் ஆர்.டி.ஓ. விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com