இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 13-08-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 13 Aug 2025 1:09 PM IST
ராஜஸ்தானில் வேன் - லாரி மோதி விபத்து: 7 குழந்தைகள் உட்பட 10 பேர் பலியான சோகம்
ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டத்தில், தேசிய நெடுஞ்சாலையில் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 7 குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 22 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்கள் சிலரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
- 13 Aug 2025 1:07 PM IST
வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவன்.. அடுத்து நடந்த நெஞ்சை உலுக்கிய சம்பவம்
பள்ளியில் காலை 7 மணி அளவில் நடைபெற்ற சிறப்பு வகுப்பில் அந்த மாணவன் கலந்து கொண்டார். அப்போது, பள்ளி வகுப்பறையில் அமர்ந்திருந்த மாணவன் மோகன்ராஜ் திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே, சக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்த மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
- 13 Aug 2025 1:05 PM IST
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் நடவடிக்கை - பொய் புகார் அளிப்பவர்களுக்கு போலீசார் எச்சரிக்கை
போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மைக்குப் புறம்பாக போக்சோ சட்டத்தை பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டப்பிரிவு 22(1)-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
- 13 Aug 2025 1:03 PM IST
ஜார்க்கண்ட் என்கவுன்டர்; மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை
ஜார்க்கண்ட் மாநிலம் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் கோயில்கேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சவுதா பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
- 13 Aug 2025 1:01 PM IST
எல்லையில் ஊடுருவல் முயற்சி; துப்பாக்கி சண்டையில் இந்திய வீரர் பலி
எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையின் போது. இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது. மோசமான வானிலையை பயன்படுத்தி ஊடுருவல் முயற்சி நடைபெற்ற நிலையில், அதை நமது பாதுகாப்பு படை வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
- 13 Aug 2025 1:00 PM IST
கவர்னர் தேநீர் விருந்து: காங்கிரஸ் புறக்கணிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், மத்திய பாஜக அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தலை ஆணையத்தை கண்டித்தும்,
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 13 Aug 2025 12:58 PM IST
கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் ரத்து
சாகர் ராணா கொலை வழக்கில் மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை சுப்ரீம்கோர்ட்டு ரத்து செய்தது
ஒரு வாரத்திற்குள் சரணடைய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுஷில் குமாரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி சாகர் ராணாவின் தந்தை தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு அடிதடி சம்பவத்தில் சக மல்யுத்த வீரர் சாகர் ராணா (23) கொலை செய்யப்பட்டார். கடந்த மார்ச் மாதம் சுஷில் குமாருக்கு டெல்லி ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது.
- 13 Aug 2025 12:19 PM IST
கணவர் கைது... மதுரை மேயர் ராஜினாமா?
மதுரை மாநகராட்சி வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் மதுரை மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதன் எதிரொலியாக மேயர் பதவியை இந்திராணி ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மதுரை மாநகராட்சியில் நடந்த முறைகேடு குறித்து தோண்டத்தோண்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதால் இன்னும் பலர் சிக்கக்கூடும் என கூறப்படுகிறது.
- 13 Aug 2025 12:13 PM IST
அடுத்தமாதம் தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
ஜனாதிபதி திரவுபதி முர்மு செப்டம்பர் 3-ந் தேதி (புதன்கிழமை) தமிழகம் வருகை தர இருக்கிறார். திருவாரூர் மாவட்டம் நீலங்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10-வது பட்டமளிப்பு விழாவில் அவர் கலந்துகொள்கிறார்.
- 13 Aug 2025 12:06 PM IST
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் என்னென்ன..?
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு குறித்தும், இணைக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் உள்ளிட்ட விவரங்களை தகவல் தொழில்நுட்ப அணிச்செயலாளர் டி.ஆர்.பி.ராஜா பவர் பாய்ண்ட் மூலம் விளக்கினார். இதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
















