இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 02-05-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 May 2025 9:27 AM IST
பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு முன்பே உளவு பார்த்த தீவிரவாதிகள்: என்.ஐ.ஏ. தகவல்
பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தீவிரவாதிகள் காஷ்மீர் வனப்பகுதிக்குள் பதுங்கி இருந்து 4 இடங்களில் உளவு பார்த்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் தற்போதும், தெற்கு காஷ்மீரில் தங்கியிருப்பதாக என்.ஐ.ஏ. அதிர்ச்சி தகவல் அளித்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ராணுவத்தினர் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும் சந்தேகிக்கப்படும் நபர்கள், சுற்றுலா கைடுகள், பஹல்காம் பகுதியில் வசிக்கும் மக்கள் என 100-க்கும் மேற்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
- 2 May 2025 9:26 AM IST
கர்நாடகா, தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதிகள் சென்னைக்கு பணியிட மாற்றம்
கொலீஜியத்தின் பரிந்துரையை ஏற்று, கர்நாடகா ஐகோர்ட்டு நீதிபதி ஹேம்ந்த் சந்தன்கவுடர் மற்றும் தெலுங்கானா ஐகோர்ட்டு நீதிபதி கே.சுரேந்தர் ஆகியோரை சென்னை ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்து ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
- 2 May 2025 9:24 AM IST
ஐ.பி.எல்.2025: 4 இடங்கள்.. 8 அணிகள் போட்டி.. யாருக்கு வாய்ப்பு அதிகம்..?
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை 50 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.
இன்னும் 20 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒவ்வொரு அணிகளும் குறைந்தபட்சம் 8 போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டும். அதன்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.
- 2 May 2025 9:22 AM IST
காலக்கெடு நிறைவு.. அட்டாரி-வாகா எல்லை முழுவதுமாக மூடல்
மத்திய அரசின் காலக்கெடு நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது அட்டாரி-வாகா எல்லை முழுவதுமாக மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதைப்போல பாகிஸ்தானும் தனது எல்லையை மூடிவிட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்நாட்டிற்குச் செல்ல இந்தியா அனுமதி அளித்தும், எல்லை மூடப்பட்டதால் தாய்நாடு திரும்ப முடியாமல் பாகிஸ்தான் மக்கள் தவித்து வருகின்றனர்.
- 2 May 2025 9:20 AM IST
நாட்டின் முதல் தானியங்கி துறைமுகம்: விழிஞ்ஞத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
விழிஞ்ஞம் துறைமுகத்தின் அதிகாரபூர்வ தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. துறைமுகத்தை நாட்டுக்கு அர்ப்பணிப்பதற்காக பிரதமர் மோடி நேற்று மாலை 7.35 மணியளவில் திருவனந்தபுரம் வந்தார். தனி விமானம் மூலம் வந்த அவர் இரவு கவர்னர் மாளிகையில் தங்கினார்.
இன்று காலை 11 மணிக்கு தொடக்க விழா நடைபெறுகிறது. இதற்காக காலை காரில் விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் விழிஞ்ஞம் செல்கிறார். விழாவுக்கு மத்திய கப்பல் போக்குவரத்து துறை மந்திரி சார்பானந்த சோனாவால் தலைமை தாங்குகிறார். கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கின்றனர்.
- 2 May 2025 9:19 AM IST
அடுத்த மாதம் தேர்தல்; தென்கொரிய அதிபர் ராஜினாமா
தென்கொரியாவில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஜூன்) 3-ந்தேதி நடைபெறுகிறது. இதில் பழமைவாத கட்சியான தென்கொரிய மக்கள் சக்தி கட்சி சார்பில் ஹான் டக்-சூ போட்டியிடுகிறார்.
இதனால் தனது அதிபர் பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து துணை பிரதமர் சோய் சாங்-மோக் தற்காலிக அதிபராக செயல்படுவார் என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
- 2 May 2025 9:17 AM IST
போர் பதற்றம்.. உளவுப்பிரிவு தலைவரை பாதுகாப்பு ஆலோசகராக நியமித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அந்த நாட்டு உளவுப்பிரிவான ஐ.எஸ்.ஐ.யின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் முகமது ஆசிம் மாலிக் நியமிக்கப்பட்டு உள்ளார்.
- 2 May 2025 9:16 AM IST
காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடுகிறது
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மத்திய அரசின் முடிவு பற்றி விவாதிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.
இதில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிற்து.
பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க கடந்த 24-ந் தேதியும் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
- 2 May 2025 9:14 AM IST
அதிமுக செயற்குழு இன்று கூடுகிறது
அதிமுக செயற்குழு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிற மாநில கழக செயலாளர்கள், கட்சி எம்.பி.க்கள். எம்எல்ஏ.க்கள், மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர்.
- 2 May 2025 9:12 AM IST
நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து 2-வது அணியாக வெளியேறிய ராஜஸ்தான்
நடப்பு தொடரில் சென்னையைத் தொடர்ந்து 2-வது அணியாக ராஜஸ்தான் அணி வெளியேறி இருக்கிறது.
















