இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில் 24-04-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 24 April 2025 7:16 PM IST
முரசொலி செல்வம் சிலை திறப்பு
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி பத்திரிகை அலுவக வளாகத்தில், மறைந்த மூத்த பத்திரிகையாளர் முரசொலி செல்வத்தின் சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், நடிகர் சத்யராஜ், அவரது மகள் திவ்யா சத்யராஜ், முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- 24 April 2025 7:11 PM IST
விமானங்களை மாற்றுப்பாதையில் இயக்கும் ஏர் இந்தியா
பாகிஸ்தான் வான்பரப்பில் இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டதை அடுத்து, விமானங்களை மாற்றுப்பாதையில் இயக்க ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது. வட அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 011 69329333, 011 69329999 தொலைப்பேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
- 24 April 2025 7:09 PM IST
உதம்பூரில் தீவிரவாதிகளை தேடும் ராணுவம்
ஜம்மு-காஷ்மீர் உதம்பூர் அருகே டுடுவில் பாதுகாப்புப் படை-தீவிரவாதிகள் இடையே சண்டை நீடித்து வருகிறது. ஒரு ராணுவ வீரர் வீரமரணமடைந்த நிலையில் காட்டுக்குள் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை தேடும் பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- 24 April 2025 6:18 PM IST
எல்லை பாதுகாப்பு படை வீரரை சிறைபிடித்த பாகிஸ்தான்
தவறுதலாக எல்லை தாண்டி சென்ற இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் பி.கே.சிங்கை பாகிஸ்தான் வீரர்கள் சிறைபிடித்துள்ளனர்.
சீருடை அணியாமல் சென்ற நிலையில் அவரை பாகிஸ்தான் சிறைபிடித்துள்ளது. இதனிடையே நிழலுக்காக விவசாயிகளுடன் ஒதுங்கியபோது எல்லை தாண்டியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்லது.
பாகிஸ்தான் வசம் உள்ள வீரரை மீட்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
- 24 April 2025 6:13 PM IST
இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன்
இந்திய பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவாவுக்கு பாகிஸ்தான் சம்மன் அனுப்பி உள்ளது.
டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு இந்தியா சம்மன் வழங்கிய நிலையில், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் இந்த சம்மன் அனுப்பி உள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் பொறுப்பேற்ற முதல் பெண் பொறுப்பு தூதர் கீதிகா ஸ்ரீவத்ஸவா என்பது குறிப்பிடத்தக்கது.
- 24 April 2025 6:08 PM IST
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் : அனைத்து கட்சி கூட்டம் தொடங்கியது
பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ள இன்று (24.06.2025) மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் தற்போது அனைத்து கட்சி கூட்டம் தொடங்கி உள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் தலைமையில் இந்த அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளுக்கு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் பங்கேற்று அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பேசுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- 24 April 2025 5:57 PM IST
காஷ்மீர் செல்லாமல் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்: திருமாவளவன் விமர்சனம்
பிரதமர் மோடி காஷ்மீரில் தாக்குதல் நடந்த இடத்துக்கு செல்லாமல், பீகாரில் தேர்தல் பிரசாரம் செய்வது அதிர்ச்சியளிக்கிறது. இவ்வளவு பெரிய துயரம் நடந்துள்ள சூழலில், அந்த பகுதிக்கு நேரில் சென்றிருந்தால் மக்களுக்கு ஆறுதலாக அமைந்திருக்கும். ஆனால், காஷ்மீர் தாக்குதலை பீகார் சட்டசபை தேர்தலுக்கான பரப்புரைக்கு பயன்படுத்துவது கசப்பளிக்கிறது என்று திருமாவளாவன் தெரிவித்துள்ளார்.
- 24 April 2025 5:55 PM IST
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் சந்திப்பு
இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை உள்துறை மந்திரி அமித்ஷா மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து பஹல்காம் தாக்குதல் குறித்து விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து. காஷ்மீர் தாக்குதல் குறித்தும், இந்தியாவின் சூழல் குறித்தும் விளக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பதில் தாக்குதல்கள் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகளின் ஆதரவை பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
- 24 April 2025 5:53 PM IST
பாகிஸ்தானுக்கு சிந்து நதிநீர் செல்ல தடை.. முடிவுக்கு வந்த 65 ஆண்டு கால ஒப்பந்தம்
65 ஆண்டு காலமாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சிந்து நதிநீர்ப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்ந்து கொண்டேதான் இருந்தது. ஆனால், இப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்படிருந்த நிலையில், இந்தியா தண்ணீரையே ஆயுதமாக கையில் எடுத்துள்ளது. அந்த வகையில், 65 ஆண்டு கால சிந்து நதிநீர் ஒப்பந்தம் இப்போது கைவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால், ஏற்கனவே நதிநீர் பகிர்வு செய்துகொண்டுள்ள வங்காளதேசம், நேபாளம் ஆகிய அண்டை நாடுகள் அதிர்ச்சி அடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
- 24 April 2025 5:51 PM IST
சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த பாகிஸ்தான்... எல்லையில் ராணுவம் குவிப்பு
மேலும் சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது. சிந்து நதி ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்த நிலையில் பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
போரை நிறுத்தும் வகையில் 1972ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே சிம்லா ஒப்பந்தம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து எல்லையில் ராணுவ படைகளை பாகிஸ்தான் குவித்து வருகிறது. முப்படைகளும் தயாராக இருக்க பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. இதனால் போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.