மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானின் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது - செல்வப்பெருந்தகை

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுவதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
இன்று நாடாளுமன்றத்தில், தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை அநாகரீகமாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் அவர்கள் பேசியிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது. வாக்களிக்து தேர்ந்தெடுத்த ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களை குறித்து தான் இவ்வகையில் பேசி உள்ளார்.
நாடாளுமன்ற மாண்பை பற்றி சிறிதும் தெரியாதவர்கள் பா.ஜ.க.வினர், சிறுபான்மையின நாடாளுமன்ற உறுப்பினரை அவர் சார்ந்த மதம் குறித்து பா.ஜ.க. உறுப்பினர் அவதூறாக பேசும்போது, பா.ஜ.க.வின் மூத்த மந்திரிகள் நாடாளுமன்றத்தில் அதை ரசித்து, சிரித்து கொண்டிருந்தார்கள், இவர்கள்தான் ஜனநாயகம் குறித்து தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பார்த்து பேசுகின்றனர்.
பா.ஜ.க.வினர் கொண்டுவரும் அனைத்து மக்கள் விரோத திட்டங்களை, தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி கேட்பதால் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்க்கு வந்தததை பேசுகின்றனர். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள், உரிய நேரத்தில் தகுந்த பதிலடியை கொடுப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






