மாஞ்சோலை மக்களை சந்திக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?

2 நாட்கள் சுற்றுப்பயணமாக பிப்ரவரி 6ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை செல்ல உள்ளார்.
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் கள ஆய்வு செய்வதற்காக மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார் இந்த சுற்றுப்பயணத்தில் முடிவுற்ற பணிகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சி மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
அந்த வகையில் கடந்தாண்டு இறுதியில் ஈரோடு, அரியலூர், பெரம்பலூர் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டார். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள இருந்த நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்த சூழலில் நேற்றும், இன்றும் விழுப்புரத்தில் கள ஆய்வு மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜானகிபுரம் புறவழிச்சாலை அருகே கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மறைந்த ஏ.கோவிந்தசாமியின் நினைவு அரங்கத்தையும், இட ஒதுக்கீடு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தையும் திறந்து வைத்து இன்று சென்னை திரும்பினார்.
இந்நிலையில் நெல்லை மாவட்டத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக (பிப்ரவரி 6,7ம் தேதி) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அங்கு கள ஆய்வின்போது மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் முதல்-அமைச்சர் சந்தித்து பேச உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை நீர்வளத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.






