கிண்டியில் கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் கைது

சென்னை கிண்டி பகுதியை சேர்ந்த தனியார் கட்டுமான நிறுவன என்ஜினீயரின் கார் நேற்று அதிகாலையில், திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சென்னை கிண்டி ஈஸ்வரி ரத்தினம் கார்டன் பகுதியை சேர்ந்தவர் ராம் நித்திஷ் (வயது 26). தனியார் கட்டுமான நிறுவனத்தில் என்ஜினீயராக பணி புரியும் இவரது கார் நேற்று அதிகாலை, திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதிர்ச்சி அடைந்த ராம் நித்திஷ், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் காரில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி அணைத்தார். எனினும் காரின் முன்பகுதி சேதமடைந்தது.
இதுகுறித்து அவர் கிண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் கிண்டி, மடுவாங்கரையை சேர்ந்த விஜய பிரபாகரன்(25) என்பவர் பீர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து அதனை ராம் நித்திஷ் கார் மீது வீசியது தெரிந்தது. இதையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
மது போதைக்கு அடிமையான பிரபாகரன், 2 முறை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இதனால் அவர் மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது. எதற்காக ராம் நித்திஷ் காரில் பெட்ரோல் குண்டு வீசினார்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.






