காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் - வானிலை மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
பொதுவாக டிசம்பர் மாதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரத்துடன் இருக்கும். ஆனால் இம்முறை டிசம்பரில் வடகிழக்கு பருவமழை பெரிய அளவில் பொழியவில்லை. கடும் பனி நிறைந்த மாதமாகவே டிசம்பர் இருந்தது. இந்த நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நேற்று புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.
மேலும், இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் இந்திய பெருங்கடல் நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. குறிப்பாக, காவிரிப் படுகை மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தென் மேற்கு வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழ்நாட்டில் வரும். 9, 10 ஆகிய தேதிகளில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.






