வெனிசுலா அதிபரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்; அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்

வெனிசுலா மீது அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது.
வெனிசுலா அதிபரை உடனடியாக விடுதலை செய்யுங்கள்; அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தல்
Published on

பீஜிங்,

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வந்தார். மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ ஆதரவு அளித்து வந்ததாகவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். மேலும், பசுபிக் கடலில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட அமெரிக்க கடற்படை வெனிசுலாவில் இருந்து போதைப்பொருள் கடத்தி வந்ததாக கூறி பல படகுகளை சுட்டு வீழ்த்தியுள்ளது.

இதனிடையே, வெனிசுலா மீது நேற்று அதிகாலை (3ம் தேதி - சனிக்கிழமை) அமெரிக்கா திடீர் தாக்குதல் நடத்தியது. வெனிசுலா அதிபர் மாளிகைக்குள் நுழைந்த அமெரிக்க படையினர், வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ அவரது மனைவி சிலியா அடிலா புளோரிஸ் ஆகிய இருவரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர். இருவரும் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், வெனிசுலா அதிபர் நிகோலசையும், அவரது மனைவி சிலியாவையும் உடனடியாக விடுதலை செய்யும்படி அமெரிக்காவுக்கு சீனா வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வெனிசுலா அதிபர் நிகோலசையும், அவரது மனைவி சிலியாவையும் கைது செய்து நாடு கடத்திய அமெரிக்காவின் செயல் மிகுந்த கவலையளிக்கிறது. அமெரிக்காவின் இந்த செயல் சர்வதேச சட்டவிதிகள், ஐ.நா. சட்டவிதிகள், சர்வதேச நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மீறும் செயல். நிகோலசையும், அவரது மனைவி சிலியாவையும் அமெரிக்கா உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com