எத்தியோப்பிய பாடகர்கள் பாடி அசத்திய ‘வந்தே மாதரம்’ பாடல்.. நெகிழ்ந்த பிரதமர் மோடி

பிரதமர் மோடியும், இந்திய குழுவினரும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
அட்டிஸ் அபபா,
பிரதமர் நரேந்திர மோடி ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதல் ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி, அங்கு, அந்நாட்டின் மன்னர் அப்துல்லா-II முன்னிலையில் நடைபெற்ற இந்தியா - ஜோர்டான் முதலீட்டாளர் சந்திப்பில் உரையாற்றினார். மேலும் இந்தியா - ஜோர்டான் இடையே ஐந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, பிரதமர் மோடி எத்தியோபியா சென்றடைந்தார்.
இந்த பயணத்தின்போது, இந்தியா-எத்தியோப்பியா இடையிலான இருதரப்பு உறவுகளின் முன்னேற்றம் குறித்து எத்தியோபியா பிரதமர் அபி அகமது அலியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து எத்தியோப்பியாவின் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். மேலும், பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் உயரிய விருதான 'தி கிரேட் ஹானர் நிஷான் ஆப் எத்தியோப்பியா' வழங்கப்பட்டது.
இதனிடையே எத்தியோப்பியா சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டு பிரதமர் அபிய் அஹமது அலி நேற்று முன்தினம் விருந்து அளித்தார். அப்போது, எத்தியோப்பிய பாடகர்கள் 3 பேர் ‘வந்தே மாதரம்’ பாடலை பாடினர். பிரதமர் மோடியும், இந்திய குழுவினரும் தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.
இந்த வீடியோவை பிரதமர் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எத்தியோப்பிய பிரதமர் அளித்த விருந்தில் எத்தியோப்பிய பாடகர்கள் வந்தே மாதரம் பாடியது, மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாடும்போது இது நிகழ்ந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






