ரஷியாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைப்பதாக மோடி உறுதியளித்தார்: டொனால்டு டிரம்ப்

ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிகமாக எண்ணெய் வாங்கப் போவதில்லை என்று டிரம்ப் கூறினார்.
வாஷிங்டன்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்திய மக்களை நான் நேசிக்கிறேன். நம் நாடுகளுக்கு இடையே சில சிறந்த ஒப்பந்தங்களை மேற்கொள்ள நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
இன்று பிரதமர் மோடியுடன் பேசினேன், எங்களுக்குள் நல்ல உறவு உள்ளது. அவர் ரஷியாவிலிருந்து அதிக எண்ணெய் வாங்கப் போவதில்லை. நான் விரும்புவது போல், ரஷியா - உக்ரைன் போர் முடிவடைவதைக் காண அவரும் விரும்புகிறார். ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிகமாக எண்ணெய் வாங்கப் போவதில்லை. எண்ணெய் கொள்முதலை அவர்கள் வெகுவாகக் குறைத்துள்ளனர், மேலும் தொடர்ந்து அதைக் குறைத்து வருகின்றனர்” என்றார்.
டொனால்டு டிரம்ப்புடன் பேசியதை பிரதமர் மோடியும் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி கூறியதாவது: தீபாவளி வாழ்த்து தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு நன்றி. இந்த தீப ஒளித் திருநாளில், நமது இரண்டு பெரும் ஜனநாயக நாடுகளும் உலகை நம்பிக்கையுடன் ஒளிரச் செய்து, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒற்றுமையாக நிற்போம்.” என்று பதிவிட்டு உள்ளார்.
இந்தியா -- அமெரிக்கா இடையேயேயான வர்த்தக பேச்சுக்கு இடையே டிரம்ப், மேற்கண்டவாறு பேசியுள்ளார். இந்தியா மீது தற்போது அமெரிக்கா 50 சதவீதம் வரி விதித்துள்ள சூழலில், இந்த வரியை 15- 16 சதவீதம் குறைக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ள சூழலில் டிரம்பின் பேச்சு முக்கியத்துவம் பெற்றுள்ளது.






