ரஷிய அதிபர் புதினை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி


ரஷிய அதிபர் புதினை சந்தித்த ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி
x

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது.

மாஸ்கோ,

இஸ்ரேல், ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, கடந்த 13ம் தேதி அதிகாலை ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்பு கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உள்பட பல்வேறு இடங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதை தடுக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இரு தரப்பிற்கும் இடையே தொடர்ந்து இன்று 11வது நாளாக மோதல் நடைபெற்று வருகிறது.

இந்த சூழ்நிலையில், மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா 21ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதலை ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலுடனான மோதலுக்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சையது அப்பாஸ் அராசி ரஷியா சென்றுள்ளார். அவர் இன்று ரஷிய அதிபர் புதினை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஈரானுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலான கருத்துக்களை புதின் கூறினார். அவர் கூறுகையில், ஈரான் மீதான தாக்குதலை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த தாக்குதலை நியாயப்படுத்தவும் முடியாது. ஈரான் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ரஷியா தயாராக இருக்கிறது' என்றார்.

1 More update

Next Story