முதன்முறையாக காஸ்பியன் கடலில் ரஷிய எண்ணெய் களம் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்


முதன்முறையாக காஸ்பியன் கடலில் ரஷிய எண்ணெய் களம் மீது தாக்குதல் நடத்திய உக்ரைன்
x

கருங்கடலில் ரஷியாவின் 3 எண்ணெய் கப்பல்கள் மீது கடந்த 2 வாரங்களில் உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.

கீவ்,

ரஷியா மற்றும் உக்ரைன் இடையே 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது. இந்நிலையில், கருங்கடலில் ரஷியாவின் 2 கப்பல்களை கடந்த சில வாரங்களுக்கு முன், நீருக்கடியில் இருந்து ஆளில்லா விமானம் கொண்டு உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இது ரஷியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், மிரட்டல் விடும் வகையில் பேசினார். உக்ரைனை கடலில் இருந்தே துண்டித்து விடுவதே, இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கான வழியாக இருக்கும் என புதின் அப்போது கூறினார்.

அவர் தொடர்ந்து, பொதுவான கடல் பகுதி கூட இல்லாமல், மற்றொரு நாட்டின் சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தாக்குதல் நடந்திருப்பது என்பது திருட்டுத்தனம் ஆகும். உக்ரைனின் இந்த திருட்டுத்தனத்திற்கு ஆதரவு தரும் நாடுகளின் கப்பல்களுக்கு எதிராக பதிலடி நடவடிக்கைகளை எடுப்பது பற்றி ரஷியா பரிசீலனை மேற்கொள்ளும் என குறிப்பிட்டார். உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷியா தாக்குதலை விரிவுப்படுத்தும். இந்த துறைமுகங்களுக்குள் நுழையும் கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என்றும் புதின் கூறினார்.

இந்த தாக்குதல்களில் அந்த இரு கப்பல்களும் கடுமையாக சேதமடைந்து உள்ளன. செயல்பாட்டை முற்றிலும் நிறுத்தி விட்டன என உக்ரைன் வட்டாரங்கள் தெரிவித்தன. இது, ரஷிய எண்ணெய் போக்குவரத்துக்கு ஒரு பெரிய பாதிப்பை உண்டு பண்ணியிருக்கும் என்றும் உக்ரைன் அப்போது தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், முதன்முறையாக காஸ்பியன் கடலில் அமைந்துள்ள ரஷியாவின் எண்ணெய் களம் மீது டிரோன் உதவியுடன் உக்ரைன் தாக்கியுள்ளது. இதனை உக்ரைனின் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்து உள்ளது. 2016-ம் ஆண்டு புதினால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த பிளநோவ்ஸ்கி எண்ணெய் களம் ஆனது, உக்ரைனின் 4 டிரோன்களால் கடுமையாக தாக்கப்பட்டு உள்ளது.

இதனால், எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது. எந்த பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது என்பது தெளிவாக தெரியவில்லை. எனினும், உக்ரைனின் நெருங்கிய எல்லையில் இருந்து 700 கி.மீ. தொலைவில் காஸ்பியன் கடல் அமைந்துள்ளது.

ரஷியாவுக்கு நிதி அளிக்க கூடிய எண்ணெய் வளங்கள் கொண்ட அமைப்புகளை இலக்காக கொண்டு நடப்பு ஆண்டில் உக்ரைன் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால், ரஷியாவுக்கு நிதி நெருக்கடி ஏற்படும். அது உக்ரைன் மீது நடத்தும் தாக்குதல் நிறுத்தப்படும் என உக்ரைன் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, கருங்கடலில் ரஷிய எண்ணெய் கப்பல்களை உக்ரைன் தாக்கியது.

கடந்த 2 வாரங்களில் கருங்கடலில் ரஷியாவின் 3 எண்ணெய் கப்பல்கள் மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இந்நிலையில், முதன்முறையாக காஸ்பியன் கடலில், எண்ணெய் எடுப்பதற்காக அமைக்கப்பட்டு உள்ள ரஷியாவின் களம் மீது உக்ரைன் தாக்குதலை தொடுத்து உள்ளது. எனினும், ரஷியா உடனடியாக இதற்கு எந்த பதிலடியையும் தரவில்லை.

1 More update

Next Story