பா.ஜ.க.வில் இணைந்தார் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்


பா.ஜ.க.வில் இணைந்தார் பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்
x
தினத்தந்தி 3 April 2024 10:46 AM GMT (Updated: 3 April 2024 11:06 AM GMT)

பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

புதுடெல்லி,

பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் கடந்த மக்களவை தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2019 தேர்தலில் தெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த தேர்தலில், உ.பி.,யின் மதுரா தொகுதியில் நடிகை ஹேமாமாலினியை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் விஜேந்தர் சிங் களமிறங்குவார் என கடந்த சில நாட்களாக பேசப்பட்டு வந்தது.

இந்த நிலையில், குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது தேர்தலில் காங்கிரசில் சீட் மறுக்கப்பட்டதால், அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பா.ஜ.க.வில் இணைந்த பிறகு விஜேந்தர் சிங் கூறியதாவது:-

நாட்டின் வளர்ச்சிக்காகவும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளேன். விளையாட்டு துறையை ஊக்குவிக்கும் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ.க. ஆட்சியில் விளையாட்டு வீரர்களுக்கான மதிப்பு அதிகரித்து உள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

அரியானா, மேற்கு உத்தர பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அரசியல் செல்வாக்கைக் கொண்ட ஜாட் சமூகத்திலிருந்து வந்தவர் விஜேந்தர் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story