பிரதமர் மோடியின் பேச்சு: நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்


பிரதமர் மோடியின் பேச்சு: நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
x
தினத்தந்தி 22 April 2024 3:14 PM GMT (Updated: 23 April 2024 12:08 PM GMT)

பிரதமர் மோடியின் பேச்சு சர்ச்சையான நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

டெல்லி,

ராஜஸ்தானின் பன்ஸ்வாராவில் நேற்று நடைபெற்ற பா.ஜ.க. பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். இதில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகின.

நாட்டின் வளங்கள் முதலில் சிறுபான்மையினருக்கு குறிப்பாக இஸ்லாமிய மதத்தினருக்கு வழங்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் ஆட்சியில் கடந்த 2006ம் ஆண்டு டிசம்பர் மாதம் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் பேசியதாக பிரதமர் மோடி கூறினார்.

பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கூறியதாவது, முன்னதாக காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது நாட்டின் சொத்தில் முதல் உரிமை இஸ்லாமியர்களுக்கு உள்ளது என்றனர். அப்படியேன்றால் இந்த சொத்துக்கள் யாருக்கு பகிர்ந்து அளிக்கப்படும். இந்த சொத்துக்கள் அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். ஊடுருவல்காரர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும். உங்களின் கடின உழைப்பால் கிடைத்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா? இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பேச்சு குறித்து தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. 'சொத்துக்களை பங்கிடுவார்கள்' என்று பிரதமர் மோடி பேசியது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் பேச்சு பிளவு, தீங்கு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை குறிவைத்து பேசியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.

பிரதமர் மோடி வாக்காளர்களை தவறாக வழிநடத்த முயற்சிப்பதாகவும், பொய்யான ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதாகவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.


Next Story