இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 950 பேர் போட்டி


இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: தமிழ்நாட்டில் 950 பேர் போட்டி
x

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து கடந்த 20ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 27ம் தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.

இதையடுத்து, வேட்பாளர்கள் கொடுத்த ஆவணங்களை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் சரிபார்க்கப்பட்டது. அதில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் தமிழகத்தில் 39 தொகுதிகளில் 1 ஆயிரத்து 85 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று மாலை 5 மணிவரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் 135 பேர் தங்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெற்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் வேட்பாளர்கள் இறுதிப்பட்டியலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் ஆகும்.

அதேவேளை, அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 8 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.


Next Story