பணப்பட்டுவாடா புகார்: பா.ஜ.க. மாநில செயலாளர் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை


பணப்பட்டுவாடா புகார்: பா.ஜ.க. மாநில செயலாளர் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை
x
தினத்தந்தி 17 April 2024 11:17 AM GMT (Updated: 17 April 2024 11:33 AM GMT)

பணப்பட்டுவாடா புகாரில் பா.ஜ.க. ஓபிசி அணி மாநில செயலாளர் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் வரும் 19ம் தேதி (நாளை மறுதினம்) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தமிழ்நாட்டில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, பா.ஜ.க. கூட்டணி, நாம் தமிழர் என 4 முனைப்போட்டி ஏற்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை, தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் தொடர்புடைய இடங்களில் தேர்தல் ஆணையம் தீவிர சோதனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் செல்வத்தின் நெருங்கிய ஆதரவாளரும், பா.ஜ.க. ஓபிசி அணி மாநில செயலாளருமான வெங்கடேஷ் என்பவரின் வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடா தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் பாடியநல்லூரில் உள்ள வெங்கடேசின் வீட்டில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story