தமிழ்நாட்டில் 'இந்தியா கூட்டணி' அமோக வெற்றி பெறும்... ப.சிதம்பரம் உறுதி


தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும்... ப.சிதம்பரம் உறுதி
x

கோப்புப்படம்

மற்ற மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்தார்.

கொல்கத்தா,

பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் அளித்த பேட்டியில், " அனைத்து மாநிலங்கள் குறித்தும் என்னால் உதியாக கூற முடியாது. ஆனால் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். கேரளாவில் 20 தொகுதிகளையும் ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி பகிர்ந்து கொள்ளும். அங்கு பா.ஜனதாவுக்கு எதுவும் கிடைக்காது.

கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் அரசுகளுக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. இந்த மாநிலங்களில் 2019-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்ததை விட அதிக இடங்கள் காங்கிரசுக்கு இந்த முறை கிடைக்கும்.

மற்ற மாநிலங்களிலும் கட்சிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த முறை கட்சி அதிக இடங்களை கைப்பற்றும். அரியானா, உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட் மற்றும் டெல்லி மாநிலங்களிலும் இந்தியா கூட்டணி அதிகமான இடங்களை கைப்பற்றும் என்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கச்சத்தீவு விவகாரம் ஒரு முடிந்துபோன பிரச்சினை. இந்த ஒப்பந்தம் போடப்பட்டு 50 ஆண்டுகள் கடந்து விட்டன. 2014-ம் ஆண்டு முதல் பிரதமராக மோடி இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் அவர் ஏன் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை?

தேர்தலுக்காகவும், அரசியலுக்காகவுமே இந்த பிரச்சினையை அவர் தற்போது எழுப்பி இருக்கிறார். மேலும் சீன ஆக்கிரமிப்பில் இருந்து மக்களை திசை திருப்பவுமே இந்த பிரச்சினையை அவர் கையில் எடுத்து உள்ளார்" என்று அவர் கூறினார்.


Next Story