நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை உறுதி செய்தவர் பிரதமர் மோடி - அண்ணாமலை பிரசாரம்


நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை உறுதி செய்தவர் பிரதமர் மோடி - அண்ணாமலை பிரசாரம்
x
தினத்தந்தி 29 March 2024 7:38 AM GMT (Updated: 29 March 2024 7:40 AM GMT)

சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவையே தி.மு.க., அரசின் சாதனை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் களைகட்ட தொடங்கி உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள் ஏற்கெனவே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தீவிர ஓட்டு வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில், ஸ்ரீ பெரும்புதூர் தொகுதி த.மா.க வேட்பாளர் வேணுகோபாலை ஆதிரித்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு ஆகியவையே தி.மு.க., அரசின் சாதனை. சிப்காட் விவகாரம்,விவசாய நிலத்தை கையகபடுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க. அரசு நடவடிக்கை எடுத்தது.

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்துவிட்டார். பொருளாதாரத்தில் 11வது இடத்தில் இருந்த இந்தியா,கடந்த 10 ஆண்டுகளில் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதுதான் பா.ஜ.க அரசின் சாதனை.

பொருளாதாரத்தில் நாட்டை வளர்ந்த நிலைக்கு பிரதமர் மோடி கொண்டு சென்றுள்ளார். நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரத்தை உறுதி செய்தவர் பிரதமர் மோடி. சீனாவாக இருக்கட்டும், பாகிஸ்தானாக இருக்கட்டும் எந்த பிரச்சினையும் இல்லாமல் இந்தியாவுக்கான பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். சமநீதி, சமூக நீதி என தி.மு.க.,வினர் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story