பானை சின்னம் வழங்க மறுப்பு - டெல்லி ஐகோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேல்முறையீடு


பானை சின்னம் வழங்க மறுப்பு - டெல்லி ஐகோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மேல்முறையீடு
x

நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி, சிதம்பரத்தில் 6-வது முறையாக வி.சி.க தலைவரான தொல்.திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரம் தொகுதியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் மீண்டும் போட்டியிடுகிறார்.

நாடாளுமன்ற தேர்தலில் தனிச்சின்னத்தில் போட்டியிட விரும்பும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதற்காக சின்னத்தை பெற தீவிர முயற்சி மேற்கொண்டது. அதன் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திடம் தொல்.திருமாவளவன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த தேர்தலிலும் விடுதலை சிறுத்தைக்கு தனி சின்னமாக பானை ஒதுக்கப்பட்டது. இதில் முடிவு எடுக்க தாமதமானது.

இதையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கை இன்று டெல்லி ஐகோர்ட்டு விசாரித்தது. அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்குவது குறித்து இன்று முடிவு எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் பானை சின்னம் ஒதுக்க இந்திய தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து உள்ளார்.


Next Story