நீட் ரத்து ரகசியத்தை உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி


நீட் ரத்து ரகசியத்தை  உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை - எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 20 March 2024 1:28 PM GMT (Updated: 20 March 2024 1:34 PM GMT)

நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் 2024-க்கான அ.தி.மு.க. முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் இடம்பெற்றிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தே.மு.தி.க.வுக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மேலும் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.நீண்ட நாட்களாக கூட்டணி தொடர்பாக தே.மு.தி.க. - அ.தி.மு.க. இடையே பேச்சுவார்த்தை நீடித்துவந்த நிலையில், இன்று அக்கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அ.தி.மு.க. கூட்டணியில் திருவள்ளூர் (தனி) , மத்திய சென்னை , கடலூர், விருதுநகர் , தஞ்சாவூர், ஆகிய 5 தொகுதிகளில் தே.மு.தி.க. போட்டியிடுகிறது.

இந்நிலையில் அ.தி.மு.க., தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது. தொகுதி ஓதுக்கீடு ஒப்பந்தத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது,

மத்திய பா.ஜ.க. அரசுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ள தி.மு.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. அ.தி.மு.க. கூட்டணி வென்றால் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழகத்தின் நலனுக்காக போராடுவோம்.தி.மு.க. கூட்டணியில் உள்ள 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ன செய்தார்கள் ? ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றார்கள் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. நீட் தேர்வு ரத்து ரகசியத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்னும் தெரிவிக்கவில்லை. என எடப்பாடி பழனிசாமி கூறினார்.


Next Story