'தேடித்தேடி கண்டுபிடித்து 5 பன்னீர் செல்வங்கள்' சதிவேலை செய்தது யார்? - ஓ.பன்னீர் செல்வம் கேள்வி


தேடித்தேடி கண்டுபிடித்து 5 பன்னீர் செல்வங்கள் சதிவேலை  செய்தது யார்? - ஓ.பன்னீர் செல்வம் கேள்வி
x

ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மொத்தம் 6 பேர் போட்டியிடுகின்றனர்.

ராமநாதபுரம்,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பா.ஜ.க. ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிடுகிறார்.

அதேவேளை, ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மேலும் 5 பேர் வேட்புமனுதாக்கல் செய்துள்ளனர். அவர்களின் மனுக்களும் ஏற்கப்பட்டது. இதன் மூலம் ராமநாதபுரம் தொகுதியில் பன்னீர் செல்வம் என்ற பெயரில் மொத்தம் 6 பேர் மனுத்தாக்கல் செய்ததால் குழுக்கல் முறையில் வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது. முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய 5 பன்னீர் செல்வங்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒச்சப்பன் மகன் பன்னீர் செல்வத்திற்கு கரும்பு விவசாயி சின்னமும், ஒய்யாரம் மகன் பன்னீர் செல்வத்திற்கு கண்ணாடி டம்ளர் சின்னமும், ஒச்சாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்திற்கு வாளி சின்னமும், ஒய்யாத்தேவர் மகன் பன்னீர் செல்வத்திற்கு திராட்சை சின்னமும், மலையாண்டி மகன் பன்னீர் செல்வத்திற்கு பட்டாணி சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் அமைப்பை நடத்திவரும் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று அக்குகுழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது,

நான் பல தேர்தல்களை கண்டிருக்கிறேன். ஆனால், ஒரு நிராயுதபாணியாக ஒரு சுயேச்சை வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கின்ற எனக்கு இவ்வளவு ஆதரவு உள்ளது. மொத்தம் 6 பன்னீர் செல்வங்கள் வந்துவிட்டனர். வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இந்த சதிவேலையை செய்தது யார்? எப்படியோ சதித்திட்டம் வந்துவிட்டது.

பன்னீர் செல்வம் என்ற பெயரை தேடித்தேடி கண்டுபிடித்துள்ளனர். ஆனால், ஓட்டக்கார பன்னீர் செல்வம் என்பது நான்தான். இன்னொரு ஓட்டக்காரதேவர் மகன் பன்னீர் செல்வத்தை அவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை. பலாப்பழம் சின்னம் எனக்கு கிடைத்தது இறைவன் செயல். இருப்பதிலேயே பெரியப்பழம் பலாப்பழம்தான். நாட்டின் நிலையான பிரதமராக மோடி வரவேண்டுமென நாட்டில் அலை வீசிக்கொண்டிருக்கிறது. 400க்கும் மேற்பட்ட இடங்களில் பா.ஜ.க. தனித்துப்பெரும் கட்சியாக வெற்றிபெறும். அந்த சமுத்திரத்தில் என்னுடைய வெற்றியையும் கொண்டு சென்று சேர்க்கும் பொறுப்பு ராமநாதபுரம் மக்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story