ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி


ஜூனியர் ஆசிய கோப்பை: பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
x

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.

துபாய்,

19 வயதுக்குட்பட்டோருக்கான 12-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், நடப்பு சாம்பியன் வங்காளதேசம், நேபாளம் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில், ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் துபாயில் நேற்று நடந்த 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 49 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இதையடுத்து களமிறங்கிய இந்தியா 46.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. இந்தியா தரப்பில் அரோன் ஜார்ஜ் அதிகபட்சமாக 85 ரன்கள் குவித்தார்.

இதனை தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 41 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் மட்டுமே எடுத்தது. பாகிஸ்தான் தரப்பில் அந்த அணியின் ஹபீசா அஷான் அதிகபட்சமாக 70 ரன்கள் சேர்த்தார்.

இதன் மூலம் பாகிஸ்தானை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர்கள் தீபேஷ் தேவேந்திரன், கனிஷக் சவுகான் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

1 More update

Next Story