மகளிர் உலகக்கோப்பை: வங்காளதேசத்தை 100 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி

Image Courtesy : @cricketworldcup
வங்காளதேச அணி 39.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
கவுகாத்தி,
13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், மகளிர் உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற 11-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து நியூசிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுசி பேட்ஸ் மற்றும் ஜார்ஜியா பிளிம்பர் களம் கண்டர்னர். இதில் ஜார்ஜியா பிளிம்பர் 4 ரன், சுசி பேட்ஸ் 29 ரன், அடுத்து வந்த கெர் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
தொடர்ந்து சோபி டெவைன் மற்றும் புரூக் ஹாலிடே ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக ஆடி ரன்கள் சேர்த்தனர். இதன் காரணமாக இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் சோபி டெவைன் 63 ரன்னிலும், புரூக் ஹாலிடே 69 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களம் கண்ட மேடி க்ரீன் 25 ரன், இசபெல்லா கேஸ் 12 ரன், ரோஸ்மேரி மைர் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியில் நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தது. வங்காளதேசம் தரப்பில் ரெபேயா கான் 3 விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 228 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீராங்கனைகள் ஷர்மின் அக்தர் 3 ரன்களிலும், ரூப்யா ஹைதர் 4 ரன்களிலும் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். கேப்டன் நிகர் சுல்தானா 4 ரன்களில் கேட்ச் ஆனார்.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வங்காளதேச அணி தடுமாறியது. அதிகபட்சமாக பாத்திமா காதுன் 80 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். அதுதவிர ரபியா கான் 25 ரன்களும், நஹியா அக்தர் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் வங்காளதேச அணி 39.5 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேச அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.






