இளம்பெண் பாலியல் புகார்: உன்னி முகுந்தன் வழக்கை விசாரிக்க தடை நீங்கியது


இளம்பெண் பாலியல் புகார்: உன்னி முகுந்தன் வழக்கை விசாரிக்க தடை நீங்கியது
x
தினத்தந்தி 11 Feb 2023 9:08 AM GMT (Updated: 11 Feb 2023 10:59 AM GMT)

இளம்பெண் பாலியல் புகாரில் உன்னி முகுந்தன் வழக்கை விசாரிக்க தடை நீக்கியதுடன், உன்னி முகுந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது.

பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன். இவர் தமிழில் தனுசுடன் 'சீடன்' படத்தில் நடித்து இருந்தார். தற்போது உன்னிமுகுந்தன் நடிப்பில் 'மாளிகப்புரம்' என்ற பக்தி படம் மலையாளத்தில் வெளியாகி ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது. தமிழிலும் இந்த படம் வெளியாகி உள்ளது.

உன்னிமுகுந்தன் கதை விவாதத்துக்கு வரும்படி அழைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கேரளாவை சேர்ந்த இளம் பெண் 2018-ல் போலீசில் புகார் அளித்தார். இந்த வழக்கில் கோர்ட்டில் உன்னி முகுந்தன் தரப்பில் ஆஜரான வக்கீல் சைபி ஜோஸ் கிதங்கூர் பாதிக்கப்பட்ட பெண் வெளியில் சமரசம் செய்து கொள்ள இசைவு தெரிவித்து இருப்பதாக ஒரு பத்திரத்தை தாக்கல் செய்தார்.

இதையடுத்து உன்னி முகுந்தனுக்கு எதிரான வழக்கை விசாரிக்க கோர்ட்டு 2021-ல் தடை விதித்தது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகி தான் எந்தவித சமரச கையெழுத்தும் போடவில்லை என்று வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து போர்ஜரி பத்திரம் தாக்கல் செய்ததாக உன்னி முகுந்தன் வக்கீலை கேரள ஐகோர்ட்டு கண்டித்து வழக்கை விசாரிக்க விதித்திருந்த தடை உத்தரவை நீக்கியதுடன், உன்னி முகுந்தனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு விசாரணையை வருகிற 17-ந்தேதிக்கு தள்ளி வைத்து உள்ளது.


Next Story