எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி


எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும் - அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 13 Oct 2018 11:15 PM GMT (Updated: 13 Oct 2018 7:27 PM GMT)

‘சி.பி.ஐ, விசாரணைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளதால் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்’ என்று கோவையில் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

கோவை,

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்றுக்காலையில் கோவை வந்தார். அங்கு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழக முதல்–அமைச்சர் மீதான ஊழல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது இதை வரவேற்கிறோம். நெடுஞ்சாலைத் துறையில் கடந்த 7 ஆண்டுகளாக ஊழல் நடைபெற்று கொண்டு உள்ளது என கவர்னர் ரோசய்யா மற்றும் பன்வரிலால் புரோகித் ஆகியோரிடம் நான் நேரில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்க வில்லை.

இந்த நிலையில் ஆர்.எஸ்.பாரதி தொடுத்த வழக்கில் முகாந்திரம் உள்ளது என்றும், அதை தமிழகத்தில் உள்ள ஊழல் பிரிவு விசாரித்தால் உண்மை வெளி வராது. எனவே தான் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து உள்ளனர். இந்த சூழலில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அல்லது கவர்னர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

நெடுஞ்சாலை துறை மட்டும் அல்லாது அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து உள்ளது. ஊழலில் தமிழகம் 3–வது இடத்தில் உள்ளது என ஆய்வு கூறுகிறது. உயர்கல்வி துறையில் துணை வேந்தர்கள் நியமனத்தில் கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் நடந்து உள்ளது என்று கூறிய கவர்னர் மறுநாள் தனது கருத்தை மாற்றி கொண்டார். ஒரு கவர்னர் ஊழல் நடந்து உள்ளது என்று கூறுவது தவறு. அவர் தான் விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார்.

ரபேல் போர் விமானம் சம்பந்தமாக மத்திய அரசு வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். முந்தைய ஆட்சியில் ஒரு விமானம் ரூ.550 கோடி. இந்த ஆட்சியில் ரூ.1,600 கோடிக்கு பேசி உள்ளனர். இந்த சூழ்நிலையில் பிரான்சுக்கு 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிர்மலா சீதாராமன் வந்த பிறகு அவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும்.

போக்குவரத்து துறையில் பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை. அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் உள்ளது. இதற்கு காரணம் ஊழல் தான். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலையில் 2 மாதமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் கூட்டணி அமைத்து தான் போட்டியிடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story