சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஜெயலலிதா வழங்கிய யானையை முதுமலை முகாமில் பராமரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஜெயலலிதா வழங்கிய யானையை முதுமலை முகாமில் பராமரிக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 31 Oct 2018 11:07 PM GMT (Updated: 31 Oct 2018 11:07 PM GMT)

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஜெயலலிதா வழங்கிய யானை மசினியை, முதுமலை முகாமுக்கு கொண்டு சென்று பராமரிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.

மதுரை,

சென்னையை சேர்ந்த ஆண்டனி கிளின்டன் ரூபின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:–

முதுமலை வனப்பகுதியில் கடந்த 2007–ம் ஆண்டு தாயை இழந்த நிலையில் 3 வயதுடைய குட்டி யானை ஒன்றை வனத்துறையினர் மீட்டனர். அந்த குட்டி யானை தெப்பக்காடு யானைகள் முகாமில் 9 வயது வரை வளர்க்கப்பட்டது.

பின்னர் அந்த யானையை கடந்த 2016–ம் ஆண்டு அப்போதைய முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வழங்கினார். அதற்கு மசினி என்று பெயர் சூட்டப்பட்டது. பாகன் ராஜேந்திரன் கண்காணிப்பில் இந்த யானை வளர்ந்தது. தெப்பக்காடு வனப்பகுதியில் முகாமில் இருந்தபோது சுறுசுறுப்பாக இருந்த மசினி, சமயபுரம் கோவிலில் தனிமைப்படுத்தப்பட்டதால் அதன் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த மே மாதம் 25–ந்தேதி மசினி யானைக்கு மதம் பிடித்தநிலையில் பாகன் ராஜேந்திரனை கோவிலில் வைத்தே மிதித்து கொன்றது. இந்த சம்பவத்தில் 9 பக்தர்களும் காயம் அடைந்தனர். இதையடுத்து சிகிச்சைக்காக அந்த யானை தஞ்சாவூர் ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பப்பட்டது. வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின்படி யானை, பாதுகாக்கப்பட்ட வன உயிரினங்களில் ஒன்றாக உள்ளது. துன்புறுத்தப்படுவதில் இருந்து யானைகளை பாதுகாக்க சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை பல்வேறு வழிகாட்டுதல்களை கூறி உள்ளது.

எனவே தஞ்சாவூர் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் உள்ள மசினி யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் சேர்க்க வேண்டும். யானைகளை அதன் இருப்பிடமான வனப்பகுதிகளில் இருந்து பிரித்து கோவில் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, மசினி யானைக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி டீன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘மசினி யானையை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு பாதுகாப்பாக அழைத்துச் சென்று பராமரிக்க வேண்டும். யானையை கண்காணிக்க அந்த முகாமில் 24 மணி நேரமும் கால்நடை டாக்டர்கள் பணியில் இருக்க வேண்டும். மசினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரத்தநாடு கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன், முதுமலைக்கு வாரந்தோறும் சென்று மசினியை கண்காணிக்க வேண்டும். யானையின் உடல்நிலை முன்னேற்றம் குறித்து அடுத்த மாதம் (டிசம்பர்)அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.


Next Story