நெல்லிக்குப்பத்தில் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை


நெல்லிக்குப்பத்தில் ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணம் கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 21 Jan 2019 10:56 PM GMT (Updated: 21 Jan 2019 10:56 PM GMT)

நெல்லிக்குப்பத்தில் ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் வைடப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குப்பு. இவருடைய மகன் விஜய் (வயது 22). டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு விஜய் தனது நண்பரை பார்த்துவிட்டு வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு, வீட்டைவிட்டு சென்றார். ஆனால் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் வீட்டின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாள பகுதியில் விஜய் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள், விஜயின் பெற்றோர், உறவினரிடம் கூறினர். இதை அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விஜயின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவரது உடலில் ரத்தக்காயமும், தலையின் பின் பகுதியில் அடிப்பட்டு இருந்தது.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் முதுநகர் ரெயில்வே போலீசார் மற்றும் நெல்லிக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்குள்ளவர்களிடம் விசாரித்தனர். ஆனால் விஜய் எப்படி இறந்தார்? என்பது தெரியவில்லை.

இதையடுத்து விஜயின் உடலை கடலூர் ரெயில்வே போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் விஜயை யாரேனும் அடித்துக் கொலை செய்து தண்டவாளத்தில் உடலை வீசி சென்றார்களா? அல்லது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டவாள பகுதியில் டிரைவர் பிணமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story