திருட்டு வழக்கில் வாலிபர் கைது: மோட்டார்சைக்கிள்-பணம் பறிமுதல்


திருட்டு வழக்கில் வாலிபர் கைது: மோட்டார்சைக்கிள்-பணம் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Dec 2019 10:43 PM GMT (Updated: 27 Dec 2019 10:43 PM GMT)

திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.3ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் அவினாசி ரோடு அம்மாபாளையம் போலீஸ் சோதனை சாவடியில் திருமுருகன்பூண்டி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதை தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் கோவை சின்னியம்பாளையத்தை அடுத்த பட்டத்தரசியம்மன் கோவில் வீதியை சேர்ந்த கார்த்திக் (வயது 25) என்பது தெரிய வந்தது.

மேலும் திருமுருகன்பூண்டி அருகே உள்ள டாஸ்மாக் கடை முன்பு சதாசிவம், முரளிசங்கர் ஆகியோருக்கு சொந்தமான மோட்டார்சைக்கிள்களை திருடியதும் அவர்தான் என்பது தெரிந்தது.

இதையடுத்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து மோட்டார்சைக்கிள் மற்றும் ரூ.3 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story