மராட்டியத்தில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 நக்சலைட்டுகள் உயிரிழப்பு


மராட்டியத்தில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 நக்சலைட்டுகள் உயிரிழப்பு
x

4 நக்சலைட்டுகள் தலைக்கு ரூ.36 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பை,

மராட்டிய மாநிலம் கட்சிரோலியில் இன்று போலீசாருடன் நடந்த மோதலில் 4 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்தார். இவர்கள் மீது ரூ.36 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி நீலோத்பால் கூறுகையில், "மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், நாசகார செயல்களில் ஈடுபடும் நோக்கில் தெலங்கானாவில் இருந்து சில நக்சலைட்டுகள் பிரன்ஹிதா நதியைக் கடந்து கட்சிரோலிக்குள் நுழைந்துள்ளதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது.

இதனைத் தொடர்ந்து கட்சிரோலியின் சிறப்பு பிரிவான சி-60 மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அந்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இன்று காலை ரேப்பன்பள்ளி அருகே உள்ள கோலமார்கா மலைப்பகுதியில் சி-60 பிரிவு சிறப்புப்படையினர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மறைந்திருந்த நக்சலைட்டுகள் சிலர், சிறப்புப்படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிறப்புப்படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். துப்பாக்கிச்சூடு நின்ற பின்னர், அந்த பகுதியில் போலீசார் தேடுதல் நடத்தினர். அப்போது, 4 ஆண் நக்சலைட்டுகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவர்களின் தலைக்கு ரூ.36 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டிருந்தது.

அங்கிருந்து ஏகே.47 துப்பாக்கி, கார்பைன், 2 நாட்டுத் துப்பாக்கிகள், நக்சல் இலக்கியங்கள் மற்றும் பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன. உயிரிழந்த நக்சலைட்டுகள் வர்கீஸ், மக்து, இருவரும் வெவ்வேறு நக்சல் குழுக்களின் செயலாளர்கள் மற்றும் படைப்பிரிவு உறுப்பினர்களான குர்சங் ராஜு மற்றும் குதிமேத்தா வெங்கடேஷ் ஆகியோர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.


Next Story