குடிபோதையில் தகராறு செய்ததால் வாலிபரை கொன்று உடலை எரித்த தந்தை


குடிபோதையில் தகராறு செய்ததால் வாலிபரை கொன்று உடலை எரித்த தந்தை
x
தினத்தந்தி 1 July 2023 6:45 PM GMT (Updated: 1 July 2023 6:45 PM GMT)

குடிபோதையில் தகராறு செய்ததால் வாலிபரை அடித்துக்கொன்று உடலை எரித்த தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொட்டபள்ளாபுரா:

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாபுரா தாலுகா வனீகரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமையா (வயது 58). தொழிலாளி. இவரது மகன் ஆதர்ஷ் (வயது 28). ஆதர்ஷ் சரிவர வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். மேலும் குடிபோதைக்கு அடிமையான ஆதர்ஷ் அடிக்கடி வீட்டுக்கு குடிபோதையில் வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

அத்துடன் குடிக்க பணம் கேட்டும் தந்தை, தாயை தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த ஆதர்ஷ் தாயிடம் மீண்டும் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால் அவரை ஆதர்ஷ் சரமாரியாக தாக்கிவிட்டு, பணத்தை பறித்து சென்றதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்த ஜெயராமையா கோபத்தின் உச்சத்துக்கு சென்றார். குடிபோதையில் மகன் தினமும் வந்து கொடுமைப்படுத்துவதை தாங்கி கொள்ள முடியாத அவர், மகனை கொல்ல முடிவு செய்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை ஆதர்ஷ் அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு மதுகுடிக்க சென்றுள்ளார். பின்னர் தள்ளாடியபடி மதுபோதையில் வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஜெயராமையா அவரை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் ஆதர்ஷ் துடி துடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதிக்கு உடலை இழுத்துச் சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளார். ஆனால் பாதி உடல் எரிந்த நிலையில் கிடந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சென்ற தொட்டபெலவங்களா போலீசார், கொலையான ஆதர்ஷ் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகனை கொலை செய்து உடலை எரித்த ஜெயராமையாவை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தை அடித்துக்கொன்று உடலை எரித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story