அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு


அதிமுக பொதுக்குழு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மேல்முறையீடு
x
தினத்தந்தி 28 Sep 2023 12:40 PM GMT (Updated: 28 Sep 2023 12:44 PM GMT)

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்தாண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் ஓ.பன்னீர்செல்வம், அவருடைய ஆதரவாளர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். தங்களை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியிருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, அதிமுக பொதுக்குழு மற்றும் தீர்மானங்களுக்கு தடை விதி மறுத்துவிட்டார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டின் டிவிஷன் பெஞ்சில், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு விசாரித்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் , கடந்த மாதம் 25 ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதிகள், சுப்ரீம் கோர்ட் பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்துக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டனர்.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ பன்னீர் செல்வம் மேல் முறையீடு செய்துள்ளார். சென்னை ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டால் தனது தரப்பு கருத்தையும் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே கேவியட் மனுவை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story